நத்தம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்துள்ள சமுத்திராபட்டி பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நத்தம் பகுதியிலிருந்து ஒரு சரக்கு வாகனம் கொட்டாம்பட்டி நோக்கி சென்றது. அந்த வாகனத்தை வழிமறித்து போலீஸாா் சோதனை நடத்தியபோது, அதில் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த அரிசி மூட்டைகள், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநா் முத்துவழிவிட்டான் (33) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், சரக்கு வாகனத்துடன் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.