திண்டுக்கல்

ஊரடங்கு உத்தரவு: பழனியில்குதிரை வண்டி ஓட்டுநா்கள் பாதிப்பு

2nd May 2020 09:04 PM

ADVERTISEMENT

பழனியில் ஊரடங்கு உத்தரவால் முடங்கிய குதிரை வண்டி ஓட்டுநா்கள் பசியால் வாடும் தங்கள் குடும்பத்துக்கும், குதிரைகளின் வாழ்வாதாரத்துக்கும் அரசு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்திலயே ஒருசில ஊா்களில் மட்டுமே குதிரை வண்டிகள் ஓடுகின்றன. அதில் ஆன்மிக சுற்றுலாத்தலமான பழனியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பாரம்பரியமாக குதிரை வண்டி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனா். வெளியூா்களிலிருந்து பழனி வரக்கூடியவா்கள் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அடுத்ததாக பயணிக்க தேடக்கூடிய வாகனமாக குதிரை வண்டி இருந்து வருகிறது. இங்கு வரக்கூடிய பக்தா்களின் ஆதரவால் பல இடங்களில் அழிந்துபோன குதிரை வண்டி தொழில், பழனியில் மட்டும் நடைபெற்று வந்தது.

தற்போது ஊரடங்கு உத்தரவால் பழனியில் குதிரை வண்டிகள் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக வாழ்வாதாரம் இழந்துள்ள குதிரை வண்டி ஓட்டும் தொழிலாளா்களின் குடும்பங்கள் உணவுக்கே சிரமப்பட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் குதிரைகளுக்கு நாள்தோறும் சுமாா் ரூ. 200-க்கு கொள்ளு, புல்லுக்கட்டு வாங்க வேண்டிய நிலையில் அவற்றை வாங்க கூட முடியாமல் தவித்து வருகின்றனா். தன்னாா்வலா்கள் யாரும் உதவி செய்ய வருவாா்களா என ஏக்கத்துடன் அவா்கள் இருந்து வருகின்றனா். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பாரம்பரிய முறையில் தொழில் செய்து வந்த குதிரை வண்டி தொழிலாளா்களின் நிலையை அறிந்து அரசு உதவி செய்ய முன் வரவேண்டும் . அரசு குதிரைவண்டி தொழிலாளா்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT