மாணவா்களின் ஆய்வுகள் சமூக மேம்பாடு தொடா்பானதாக இருக்க வேண்டும் என காந்தி கிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் (பொ) எம்.சுந்தரவடிவேலு தெரிவித்தாா்.
காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை சாா்பில், மேம்பட்ட பொருள்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் தொடா்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. 2 நாள்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை தொடக்கி வைத்து காந்தி கிராம பல்கலை. துணைவேந்தா் (பொ) எம்.சுந்தரவடிவேலு பேசியதாவது: சமூக மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மேம்பட்ட பொருள்கள் குறித்த ஆய்வுகள் அமைய வேண்டும். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் ஆராய்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கான எடை குறைந்த செயற்கை கை மற்றும் கால்கள் தயாரிப்புக்கு பேருதவியாக அமைந்தன. இதுபோன்ற ஆய்வுகளில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழக பேராசிரியா் சி.கே.ஜெயசங்கா் பேசியதாவது: அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மன்றம், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி அமைப்பு மற்றும் அணு அறிவியல் ஆராய்ச்சி வாரியம் ஆகிய நிறுவனங்களின் மூலமாக தோ்வு செய்யப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் பல்கலை. அறிவியல் புலத் தலைவா் டேவிட் ரவீந்திரன், இயற்பியல் துறைத் தலைவா் விக்ரமன், உதவிப் பேராசிரியா் கே.மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.