கொடைக்கானலில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெகிழி பயன்பாடு தவிர்ப்பது, மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் நகராட்சி மற்றும் தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலம் நகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கியது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்திச் சென்றனர்.
ஊர்வலமானது செவண்ரோடு, பேருந்து நிலையப் பகுதி, அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல், நகராட்சி குடியிருப்பு வளாகம் மூஞ்சிக்கல் பகுதிகளில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கொடைக்கானல் நகராட்சி சுகாதாரஆய்வாளர்கள் சுப்பையா, முத்து செல்வம், தனியார் பள்ளி முதல்வர் குணாசிங் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பள்ளி, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.