திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 490 மாணவர்கள், மே 5ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வில் பங்கேற்கின்றனர்.
மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பில் 490 பேர் பங்கேற்க உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்துக்குள்பட்ட பழனி, திண்டுக்கல், வேடசந்தூர், வத்தலகுண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவர்கள், 141 மாணவிகள் என மொத்தம் 211 பேர் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதவுள்ளனர். அதேபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 41 மாணவர்கள், 98 மாணவிகள் என மொத்தம் 139 பேரும் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதுகின்றனர். மேலும், ஆங்கில வழியில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 13 மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 52 மாணவர்கள், 75 மாணவிகள் என மொத்தம் 127 பேர் இத் தேர்வை எழுதுகின்றனர். இந்த 490 மாணவர்களுக்கும், தொடு வானம் மையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 490 மாணவர்களில் தேர்வு செய்யப்பட்ட 86 பேருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 72 மாணவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 10 பேர், சென்னையின் இரு வேறு இடங்களில் தலா 2 பேர் என மொத்தம் 86 பேருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புப் பயிற்சி புதன்கிழமையுடன் (மே 1) நிறைவு பெறுகிறது.