கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.வி.எஸ்.குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2019- 20ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் ஆக. 5ஆம் தேதி தொடங்கும்.
குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்து பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேரலாம். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.14,850 செலுத்த வேண்டும். இப்பயிற்சியில் தேர்ச்சிப் பெறுவோருக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சான்றிதழ், நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களுக்குமான பயிற்சி சான்றிதழ் மற்றும் கணினி பயிற்சி சான்றிதழ் என 3 சான்றிதழ்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வழங்கப்படும்.
இதன் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வேலைவாய்ப்பு பெறலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல்- பழனி புறவழிச்சாலையிலுள்ள திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை 9092578991, 8870011972 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.