திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே ஞாயிற்றுக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மையநாயக்கனூர் அருகே மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையின் ஓரமாக கடந்த ஒரு வாரமாக ஒரு மூட்டை கிடந்துள்ளது. அந்த மூட்டைக்கு ஒரு மர்ம நபர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. மூட்டை எரிந்ததில், அதனுள்ளே இருந்த பெண்ணின் சடலம் வெளியே தெரிந்தது.
இதைக்கண்ட அப்பகுதியினர் அம்மையநாயக்கனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தீயை அணைத்து சோதனை செய்தனர். இதில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது. அவரது கால்களில் 3 மெட்டிகளும், கை விரலில் ஒரு மோதிரமும் இருந்துள்ளது.
மீட்கப்பட்ட சடலத்தை, பிரேதப் பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.