திண்டுக்கல்

"மாணவர்கள் மேதையாவதற்கு கல்வி அவசியம்'

30th Aug 2019 08:23 AM

ADVERTISEMENT

மாணவர்கள் வாழ்க்கையில் மேதையாவதற்கு கல்வி அவசியம். அது ஒரு ஜீவசக்தி என, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தெரிவித்துள்ளார். 
     கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, கணினி மைய வங்கியியல் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை, அட்டும்பட்டியிலுள்ள பல்கலைக்கழக அரங்கில் வியாழக்கிழமை நடத்தின. இந்நிகழ்ச்சியை, பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தலைமை வகித்து தொடக்கிவைத்துப் பேசியதாவது:
     கல்லூரி மற்றும் உயர் கல்வியில் படிக்கும் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், மேதைகளாக ஆவதற்கும் கல்வி அவசியம். அது ஒரு ஜீவசக்தி. பணம் இல்லையே என்ற எண்ணத்தில் படிப்பை கைவிடக் கூடாது. இளநிலை பட்டப் படிப்போடு நிறுத்திவிடாமல், முதுகலை படிப்பையும் தொடரவேண்டும்.       "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற வாக்குப்படி, தாங்கள் விரும்பிய  கல்வியை படிக்கும் வரையில் பல்வேறு தடைகள் வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு  வெற்றி பெற்றால்தான் வாழ்க்கையில் மாணவர்கள் சாதிக்க முடியும் என்றார். 
     பின்னர், கொடைக்கானல் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் சந்தோஷ் பேசுகையில், கல்விக்கு பணம் ஒரு தடையல்ல. வங்கி மூலம் பணம் பெறுவதற்கான உதவிகளை வழங்குவதாகவும், மாணவர்கள் கல்விக் கடன் பெற்று உயர் கல்வியை தொடர்வதற்கும் அறிவுரைகளை வழங்கினார்.
     நிகழ்ச்சியில்,  பல்கலைக்கழகப் பதிவாளர் சுகந்தி முன்னிலை வகித்துப் பேசினார். இதில், உதவிப் பேராசிரியை பூர்ணிமா மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியைகள், கல்லூரி மாணவிகள் என 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 
     இதற்கான ஏற்பாடுகளை, கணினித் துறை, ஆங்கிலத் துறை, மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியைகள் செய்திருந்தனர். முன்னதாக, உதவிப் பேராசிரியை முத்து மீனலோசினி வரவேற்றார். மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியை ரதிதேவி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT