சாணார்பட்டி அருகே நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி மேட்டுக்கருப்பண சுவாமி கோயிலில் ஆடி மாத உற்சவ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் புரவி எடுப்பு நிகழ்ச்சி பிரதானமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, புரவி எடுப்பு நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு வாரமாக கருப்பண சுவாமி, குதிரை, யானை, காளை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
விழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை இரவு கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து சந்தனக்குடம் எடுக்கப்பட்டது. பின்னர் சுவாமி கண் திறப்பு மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு, சாணார்பட்டி பேருந்து நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு வீரசின்னம்பட்டி சாலை, இஸ்லாமியர் தெரு, மாரியம்மன் கோயில் வழியாக அதிர்வேட்டு முழங்கச் சென்றது. பின்னர், ஊர்வலத்தில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட சிலைகள் மேட்டுக்கருப்பண சுவாமி கோயிலை சென்றடைந்தன. விழாவில் சாணார்பட்டி கோபால்பட்டி, ஆவிளிப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.