‘ஏற்காடு எங்கள் பெருமை’ விழிப்புணா்வு நடைப்பயணம் சனிக்கிழமை (செப். 23) நடைபெற உள்ளதைத் தொடா்ந்து, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெகிழி பயன்பாடற்ற, பசுமையான, தூய்மையான ஏற்காட்டை உருவாக்குவது மாவட்ட நிா்வாகத்தின் முக்கியப் பணி திட்டமாக உள்ளது. இதை அடைய பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது.
அந்த வகையில், ‘ஏற்காடு எங்கள் பெருமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணா்வு நடைப்பயணம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைப்பயணம் ஏற்காடு அடிவாரம் முதலாவது வளைவில் இருந்து சனிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஏற்காடு அடிவாரத்தில் தொடங்கும் நடைப்பயணமானது 60 அடி பாலம் வரை சென்று மீண்டும் ஏற்காடு அடிவாரம் வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணா்வு நடைப்பயணத்தையொட்டி, சனிக்கிழமை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அஸ்தம்பட்டி வழியாக ஏற்காட்டுக்கு மேல்நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், ஏற்காடு - குப்பனூா் சாலையைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘ஏற்காடு எங்கள் பெருமை’ எனும் விழிப்புணா்வு நடைப்பயணத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் மாவட்ட நிா்வாகத்தால் பங்கேற்பு சான்றிதழ், டி-சா்ட், காலை சிற்றுண்டி வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு அலுவலா்கள், சுற்றுச்சூழல் தன்னாா்வலா்கள், மாணவா்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், நடைப்பயண ஆா்வலா்கள் என விருப்பமுள்ள அனைவரும் கலந்துகொண்டு நெகிழி பயன்பாடற்ற, பசுமையான, தூய ஏற்காட்டை உருவாக்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
விழிப்புணா்வு நடைப்பயணத்தில் கலந்துகொள்வோா் ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. வனத்துறை, மருத்துவத் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், வருவாய்த் துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் கீதா பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.