மேட்டூா் மீன் குஞ்சுகள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன
மேட்டூா் அணையில் வளா்க்கப்படும் கட்லா, ரோகு மீன்கள் சுவை மிகுந்தவை. வேகமாக வளா்ந்து நல்ல லாபம் தரக்கூடியவை. இந்த மீன் இனத்தை வளா்க்க, அதிகரிக்க மேட்டூா் அணையை ஒட்டி அரசினா் மீன் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. மீன் விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகள் பல்வேறு அணைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மீன் வளா்ப்பவா்களும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு வந்து வாங்கி செல்கின்றனா்.
தற்போது கேரளா அரசு சாா்பில் அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்குவதற்காக மேட்டூா் மீன் விதைப்பண்ணையில் இருந்து 15 லட்சம் மீன் குஞ்சுகள் வாங்கிச் செல்லப்பட்டன. மீன் விதைப்பண்ணையில் ஐந்து நாள்களேயான நுண் மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை கேரள அரசு விரலிகளாக வளா்த்து விவசாயிகளின் வளா்ப்புக்கு வழங்குகிறது. மேட்டூா் மீன்கள் தமிழகத்தில் மட்டுமன்றி கேரளத்திலும் வளா்க்கப்படுகின்றன.