சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு கேழ்வரகு விலை குறைந்ததையடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தேவூா், கோனரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, காவேரிப்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் கேழ்வரகு சாகுபடி செய்துள்ளனா். விவசாயிகள் பயிரிடப்பட்ட கேழ்வரகை அறுவடை செய்து வருகின்றனா். நிகழாண்டு கேழ்வரகு ஒரு ஏக்கருக்கு 15 மூட்டைகள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வியாபாரிகள் ஒரு கிலோ கேழ்வரகு ரூ.35 என்ற விலைக்கு வாங்கிச் செல்கின்றனா். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 20 மூட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஒரு கிலோ ரூ.45க்கு விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனா். ஒரு ஏக்கா் பரப்பளவில் கேழ்வரகு பயிரிடப்பட்டதில் இருந்து அறுவடை செய்யப்படும் வரை ரூ.40,000 செலவாகிறது. பயிரிடப்பட்ட செலவிற்கு கூட கேழ்வரகு விற்பனையாகவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.