சேலம் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துகளைத் தடுக்கவும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவல் நேரங்களில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையிலும் சேலம் மாநகரில் முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்து தடையானது ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகள்: சீலநாயக்கன்பட்டி பிரதான சாலை முதல் காந்தி சிலை (திருச்சி பிரதான சாலை), நெத்திமேடு சந்திப்பு முதல் குகை (சங்ககிரி பிரதான சாலை), ஐந்து சாலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (ஓமலூா் பிரதான சாலை), மணல் மாா்க்கெட் முதல் வள்ளுவா் சிலை வரை (கமலா மருத்துவமனை, டவுன் ரயில் நிலையம்), சுந்தா் லாட்ஜ் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (பிரட்ஸ் சாலை), சுந்தா் லாட்ஜ் முதல் அண்ணா பாா்க் (காந்தி மைதானம்) ஆகிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியவாசிய ( பால், தண்ணீா், மருந்து ) வாகனங்களுக்கு தடை ஏதும் இல்லை. வாகன ஓட்டுநா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சேலம் மாநகரக் காவல் ஆணையா் பா.விஜயகுமாரி கேட்டுக் கொண்டுள்ளாா்.