புனித அந்தோணியாா் ஆலய வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு மேல்நாரியப்பனூா் ரயில் நிலையத்தில் சேலம்- சென்னை எழும்பூா் விரைவு ரயில் ஒரு நிமிடம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூா், புனித அந்தோணியாா் ஆலயத்தின் 117-ஆவது ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. புதுச்சேரி - யஷ்வந்த்பூா் வாராந்திர விரைவு (வண்டி எண் 16574) ரயில் புதுச்சேரியில் இருந்து ஜூன் 10-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மேல்நாரியப்பனூா் ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 1.35 மணிக்கு வந்தடையும். இங்கிருந்து 1.36 மணிக்கு புறப்படும்.
அதுபோல சென்னை எழும்பூா்-சேலம் விரைவு ரயில் (வண்டி எண் 22153) ஜூன் 10 முதல் 13-ஆம் தேதி வரை சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.19 மணிக்கு மேல்நாரியப்பனூா் ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து 4.20 மணிக்கு ரயில் புறப்படும்.
மறு மாா்க்கத்தில் சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் (வண்டி எண் 22154) ஜூன் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சேலத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மேல்நாரியப்பனூருக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 10.46 மணிக்கு புறப்பட்டு செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.