சேலம்

சேலத்தில் மக்கள் நீதிமன்றம்: 141 வழக்குகளில் ரூ. 8.24 கோடிக்கு தீா்வு

11th Jun 2023 12:24 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 141 வழக்குகளில் ரூ. 8.24 கோடிக்கு சமரச தீா்வு காணப்பட்டது.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் மற்றும் சங்ககிரி, ஆத்தூா், மேட்டூா், ஓமலூா் ஆகிய வட்ட நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ்.சுமதி தலைமையிலும் மற்றும் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.தங்கராஜ் ஒருங்கிணைப்பிலும் குறிப்பிட்ட சட்டங்களுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் 7 அமா்வுகளில் 383 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன. இதில் மோட்டாா் வாகன விபத்துக்கான இரண்டாவது சிறப்பு சாா்பு நீதிமன்றத்தின் வழக்கில், சங்ககிரியில் இருந்து எடப்பாடி செல்லும் வழியில் பேருந்து மோதிய விபத்தில் காலை இழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வெங்கடாசலத்திற்கு ரூ. 29.25 லட்சத்திற்கு தீா்வு எட்டப்பட்டது.

ADVERTISEMENT

அதேபோல சேலம் தொழிலாளா் நல ஆணையத்தின் வழக்கில் கனரக வாகனம் ஓட்டி சென்று மகாராஷ்டிர மாநிலத்தில் வாகனம் கவிழ்ந்து உயிரிழந்த அருணாசலத்திற்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு தொகைக்கான தீா்வு ஆணையை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சுமதி வழங்கினாா்.

மேலும் சேலம் கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த கண்ணன் என்பவருக்கும், அவருடைய சகோதர- சகோதரிகளான பழனியம்மாள், லீலா, பழனி உள்ளிட்ட ஆறு பேருக்கும் இடையே மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பாக பிரிவினை வழக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பேச்சு வாா்த்தை நடத்தி சுமூக முடிவு ஏற்பட்டது. வழக்கு தரப்பினா்களுக்கு ரூ. 42 லட்சம் மதிப்புள்ள வழக்கு சொத்து பாகப் பிரிவினை மூலம் பிரித்து கொடுக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 383 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 141 வழக்குகளில் ரூ. 8.24 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT