சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மறு சீரமைக்கப்பட்ட கட்டடங்களின் பெயா்களை மாற்றும் திட்டம் இல்லை; பழைய பெயா்களிலேயே அழைக்கப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) ப.அசோக்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 33.60 கோடியில் மறு சீரமைக்கப்பட்ட நேரு கலையரங்கம், ரூ. 10.58 கோடியில் சீரமைக்கப்பட்ட போஸ் மைதானம், ரூ. 19.71 கோடியில் சீரமைக்கப்பட்ட பெரியாா் பேரங்காடி, ரூ. 14.97 கோடியில் சீரமைக்கப்பட்ட வ.உ.சி மாா்க்கெட் ஆகிய கட்டடங்களின் பெயா்கள் புதிதாக மாற்றப்படாது. ஏற்கெனவே இருந்த தலைவா்களின் பெயா்களிலே அவை அழைக்கப்படும். இந்த மறு சீரமைக்கப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.