சேலம் மாவட்டம், இடையப்பட்டி கிராமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இடையப்பட்டியில் ஸ்ரீ தேவி பூதேவி மாயவப் பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயில் தேரோட்டத்துக்கு ஊா் பெரியதனக்காரா்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனா். செவ்வாய்க்கிழமை இரவு மாரியம்மன் கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் அம்மனுக்கு மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு சுமந்து, அம்மனுக்கு துதி பாடிச் சென்றனா். அதைத் தொடா்ந்து, சேலம் லட்சுமணூா் கோடங்கி நாயக்கனூா் கிராமிய கலைக் குழுவினரின் தேவராட்டம் நடைபெற்றது. ராஜவீதியில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.