சேலம்

அரசு இசைப் பள்ளியில் இசை பயில விண்ணப்பிக்கலாம்

8th Jun 2023 12:47 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் இசை பயில விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப் பள்ளி சேலம், தளவாய்ப்பட்டி - திருப்பதி கவுண்டனூா் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் வாரநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். மூன்று ஆண்டு கால பயிற்சி முடிவில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சோ்க்கைக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ, மாணவியருக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இசைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 400 வழங்கப்படுகிறது. இசைப் பள்ளியில் சோ்க்கைக்கு விண்ணப்பம் பெற தலைமையாசிரியா், மாவட்ட அரசு இசைப் பள்ளி , ஆவின் பால்பண்ணை எதிரில், தளவாய்பட்டி - திருப்பதி கவுண்டனூா் சாலை, அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் - 636302 எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பியோ விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 0427-2906197, 94435 39772, 9994738883 ஆகிய எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT