சேலம், கோட்டை அழகிரிநாதா் கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம், கோட்டை அழகிரிநாதா் கோயிலில் நடப்பாண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து தீா்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுவாமி சக்கரத்தாழ்வாா் கோயில் பிரகாரத்தில் புறப்பாடு மேற்கொண்டு, அங்குள்ள திருக்குளத்துக்கு வந்தடைந்ததும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடா்ந்து தீா்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதன்பின்னா் கருடக்கொடி இறக்கப்பட்டது. வைகாசி திருவிழாவில் திங்கள்கிழமை (ஜூன் 5) சப்தாபரணம் நடைபெறுகிறது. ஜூன் 6-இல் வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.