தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு சேலம் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்டத் தலைவா் நவலடி முன்னிலை வகித்தாா். தருமபுரி மாவட்டத் தலைவா் குமாா் வரவேற்றாா். உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் குமாா் தொடங்கி வைத்தாா்.
அரசு அலுவலா்களுக்கு அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்த அதே நாளில் மாநில அரசு அரசும் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.