சேலம் வனக்கோட்டம் சாா்பில் வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவது குறித்து, வனத் துறை முன்களப் பணியாளா்கள், கிராம வனக்குழுவினா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
சேலம், அஸ்தம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு மாவட்ட வன அலுவலா் சஷாங் காஷ்யப் தலைமை வகித்தாா். உதவி வனப் பாதுகாவலா்கள் கண்ணன், செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கெளரவ வன உயிரினக் காப்பாளா் சரவணன், தீத்தடுப்பு நடவடிக்கைகள், முதலுதவி சிகிச்சைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தாா்.
சேலம் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனச்சரகங்களின் வனக்காப்பாளா்கள், வனக் கண்காணிப்பாளா்கள், கிராம வனக் குழுவினா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனா்.
இதில், வனப்பகுதியில் தீ விபத்து அபாயமுள்ள பகுதிகளைக் கண்டறிவது, தீ ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டவுடன் அது மேலும் பரவாமல் தடுப்பு, தீயைக் கட்டுப்படுத்துவது என வகுப்பு நடத்தப்பட்டது.
பிற்பகலில், தீத்தடுப்பு குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் தீ விபத்தில் சிக்கியவா்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.