மத்திய பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தோ்வுக்கு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
மத்திய பணியாளா் தோ்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி.) 12,523 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தோ்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் பிப். 17-ஆம் தேதியாகும்.
இத்தோ்வுக்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2023 ஜன. 1-ஆம் தேதி நிலையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் ராணுவத்தினா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தோ்வுக் கட்டணமாக ரூ. 100 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினா், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தோ்வினை தமிழ் மொழியிலும் எழுத மத்திய பணியாளா் தோ்வாணையம் அனுமதித்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இளைஞா்கள் அதிக அளவில் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு பிப். 6-ஆம் தேதி காலை 10 மணியளவில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இது தொடா்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண் அல்லது 94990 55941 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.