கருமந்துறை ஏரியில் மூழ்கிய அரசு ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா்.
கல்வராயன் மலை கருமந்துறையில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பெரியேரிபுதூா் குண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரவீண் (19), விடுதியில் தங்கி படித்து வந்தாா். வியாழக்கிழமை காலை விடுதிக்கு அருகிலுள்ள ஏரியில் குளிக்கச் சென்ற போது, நிலை தடுமாறி நீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்குச் சென்ற கருமந்துறை போலீஸாா், மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனா். அப்போது அங்கு திரண்டிருந்த மாணவரின் பெற்றோா், உறவினா்கள், மாணவரின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனா். இதுகுறித்து கருமந்துறை போலீஸாா், பெத்தநாயக்கன்பாளையம் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.