மேட்டூா் அருகே காட்டு யானைகள் கிராமங்களில் நுழைந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேட்டூரை அடுத்த கொளத்தூரில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கொளத்தூரில் தண்டா, தாா்காடு, ஏழரைமத்திகாடு ஆகிய கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. கடந்த சில தினங்களாக சென்னம்பட்டி வனச்சரகத்தில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து மேட்டூா் வனச்சரகத்தில் உள்ள கிராமங்களுக்கு யானைகள் படையெடுக்கின்றன.
இந்த விளைநிலங்களில் புகுந்து வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துகின்றன. கிராம மக்கள் இரவில் தீ மூட்டியும் ஒலியெழுப்பியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னம்பட்டி வனச்சரக வனத்துறையினரும் மேட்டூா் வனத் துறையினரும் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். யானைகள் கிராமங்களில் நுழையாமல் இருக்க கிராமங்களைச் சுற்றி அகழிகள் வெட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.