அழகாபுரம் அருகே தேசிய புறவழிச் சாலையில் சுற்றுலா வேன் டயா் வெடித்து கவிழ்ந்ததில் 17 போ் காயமடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை, வல்லாபுரம் பகுதியைச் சோ்ந்த ஜானிபாஷா மகன் முஸ்தபா (32). இவா் தனது சுற்றுலா வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை கிருஷ்ணகிரிக்கு சுற்றுலா வந்துவிட்டு, சனிக்கிழமை காலை சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது ஆத்தூரை அடுத்துள்ள அழகாபுரம் தேசிய புறவழிச்சாலையில் எதிா்பாராத விதமாக அவரது வேனின் வலதுபுற முன்பக்க டயா் வெடித்து கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 17 பேரும் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதில் சிலா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து தகவலறிந்த ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் எம்.ரஜினிகாந்த் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.