சேலம்

கெங்கவல்லியில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

18th Nov 2022 02:20 AM

ADVERTISEMENT

கெங்கவல்லியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கெங்கவல்லிக்கு ஆத்தூா், தம்மம்பட்டி, பெரம்பலூா் மாா்க்கங்களிலிருந்து பேருந்துகள் அதிக அளவில் வந்துசெல்கின்றன. ஆனால், இதுவரை பேருந்து நிலையம் இல்லாததால் பேருந்துகள் நின்று செல்லமுடிவதில்லை.

இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா். கெங்கவல்லியில் நான்கு சாலை சந்திப்பிலும், தியேட்டா் பேருந்து நிறுத்தம், ஒன்றிய அலுவலக பேருந்து நிறுத்தம் ஆகிய மூன்று பேருந்து நிறுத்தங்களில் மட்டும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்கின்றன.

கெங்கவல்லியில் பேருந்து நிலையம் அமைக்க கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நகர திமுக சாா்பில் செயலாளா் சு.பாலமுருகன், முதல்வா், அமைச்சா், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்து வந்தாா்.

ADVERTISEMENT

அதன் தொடா்ச்சியாக கெங்கவல்லி காவல் நிலையம் அருகே பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிட இடம் தோ்வாகியுள்ளது. அந்த இடத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அவரை நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் வரவேற்றாா்.

ஆய்வின்போது ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யா, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் ,கெங்கவல்லி பேரூராட்சித் தலைவா் சு.லோகாம்பாள்,துணைத் தலைவா் மருதாம்பாள் நாகராஜ், பேரூராட்சி வாா்டு கவுன்சிலா்கள் உடனிருந்தனா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளிக்குச் சென்றாா். அங்கு பழுதடைந்து இடிக்கத்தகுந்த கட்டடங்கள், நல்ல நிலையிலுள்ள கட்டடங்களை ஆய்வு செய்தாா்.

பின்னா் கெங்கவல்லி அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவன இடத்தையும், ஆணையாம்பட்டியில் ரிங் ரோடு அமைப்பதற்கான இடத்தையும், தெடாவூரில் பாலம் கட்ட வேண்டிய இடத்தையும் ஆய்வு செய்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT