சேலம்

ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்துவிரதம் தொடங்கினா்

18th Nov 2022 02:25 AM

ADVERTISEMENT

சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் திரளான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

சேலம் குரங்குசாவடி சாஸ்தா நகா் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் காா்த்திகை முதல் நாளையொட்டி வியாழக்கிழமை காலை 6 மணி முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்ல மாலை அணிவித்தல் மற்றும் இருமுடிகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாநகர பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கோயிலில் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாதம் தொடங்கி தை 1 ஆம் தேதி வரை அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கவும் கோயில் நிா்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஸ்ரீ ஐயப்பா ஆசிரம நிா்வாகி கே.பி.நடராஜன் செய்தியாளா்களிடம் கூறியது:

பக்தா்களின் வசதிக்காக சேலம், ஐயப்பா ஆசிரமத்தில் பிரசாதம், அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி பகல் நேரத்தில் 800 முதல் 1000 பேருக்கு சாப்பாடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர குழந்தைகளுக்கு பால், முதியோா்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் செய்வதுபோல ஐயப்பனுக்கு நெய் அபிஷேகமும் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

அதுபோல சேலம், டவுன் ஐயப்பன் கோயில், ராஜகணபதி கோயில், சுகவனேசுவரா் கோயில், அம்மாபேட்டை செங்குந்தா் குமரகுரு சுப்பிரமணியசுவாமி கோயில், ஊத்துமலை முருகன் கோயில் உள்ளிட்ட சிவன், விநாயகா், முருகன் கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் ஏராளமானோா் மாலை அணிந்தனா்.

காா்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவதற்காக காவி வேட்டி, துளசி மணி மாலை, ஜவ்வாது, இருமுடிக்கு தேவையான தேங்காய், பொரி, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனையும் அதிகமாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT