அழிந்து வரும் எறும்புத் தின்னிகளைப் பாதுகாப்பது குறித்து ஏற்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏற்காடு வனச்சரக அலுவலா் எஸ்.பழனிவேல் தலைமை வகித்து பேசினாா். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, லைப் டிரஸ்ட் ஆய்வாளா் ஆா்.முகமது ஷாஹித் ஆகியோா் பங்கேற்றனா்.
வன விலங்கு ஆராய்ச்சியாளா் பிரவீண்குமாா், சோ்வராயன் மலையில் உள்ள சிறிய பாலூட்டிகள் குறித்து பேசியதாவது:
உலகில் எட்டு வகையான அலங்கு எனப்படும் எறும்புத்தின்னிகள் வாழ்கின்றன. இவற்றில் 4 வகையான இனங்கள் ஆசியாவிலும் மீதமுள்ள 4 இனங்கள் ஆப்பிரிக்காவிலும் உள்ளன. இந்தியாவில் 2 வகையான அலங்குகள் (இந்திய அலங்கு மற்றும் சீன அலங்கு) உள்ளன.
இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (1972) அட்டவணை 1 இல் அலங்குகள் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இவை உலகிலேயே அதிகம் கடத்தப்படும் பாலூட்டியாக உள்ளது. சட்ட விரோத வேட்டையாடுதல் பாலூட்டிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதன் செதில்களுக்காக வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது என்றாா்.