மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 3,484 கனஅடியாகக் குறைந்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதன் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை காலை நொடிக்கு 5,230 கனஅடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 3,484 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை காலை 107.72அடியாக இருந்த அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை107.17 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 74.44 டி.எம்.சி.யாக உள்ளது.