மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,195 கன அடியாகச் சரிந்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கி உள்ளது. வியாழக்கிழமை காலை நொடிக்கு 5,507 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை காலை 5,195 கன அடியாகக் குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வியாழக்கிழமை காலை 108.60 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 108.16 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 75.82 டி.எம்.சி.யாக உள்ளது.