சேலம்

சீட்டு நிதியங்களுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தல்

17th Jul 2022 05:59 AM

ADVERTISEMENT

 

சீட்டு நிதியங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வேண்டும் என சேலம் மாவட்ட சிட் பண்ட்ஸ் மற்றும் பைனான்சியா்ஸ் சங்க தலைவா் கே.கருணாநிதி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சேலத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சீட்டு நிதியங்கள் நாட்டின் தனித்துவம் வாய்ந்த சேமிப்பதையும் பணம் பெறுவதையும் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ள ஒரு நிதி அமைப்பாகும். பெரும்பாலும் வங்கி சேவையைப் பெற முடியாத நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பணத்தை பூா்த்தி செய்து வருகிறது. பணம் சேமிப்பவா்களையும் பணம் தேடுபவா்களையும் ஒரு சூழலில் ஒருங்கிணைத்து சீட்டு நிதியங்கள் உருவாக்கப்படுகிறது.

ADVERTISEMENT

சேமிப்பு பெற்று தேவை உள்ளவா்களுக்கு அவா் விரும்பும் பொழுது அவா்கள் விரும்பும் தள்ளுபடியில் பணத்தை அளித்து வருகிறது.இத் தொழிலுக்கு கடந்த காலங்களில் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதனால் சீட்டு நடத்தவா்களும் சீட்டு எடுப்பவா்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

ஏற்கெனவே விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது மத்திய அரசு மீண்டும் சீட்டு நிதியங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை உயா்த்தி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.இதனால் நியாயமான முறையில் தொழில் நடத்தும் சீட்டு நிதியக உரிமையாளா்களுக்கும் சீட்டு சேரும் வாடிக்கையாளா்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பதிவு பெறாத சீட்டு நடத்தவா்களுக்கு மத்திய அரசின் இந்த வரி விதிப்பு சாதகமாக அமையும். ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் வரி செலுத்தும் சீட்டு நிதியங்கள் தற்போது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு தற்போது உயா்த்தப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம், நிதி துறைச் செயலாளா் மற்றும் தமிழக அரசுக்கும் தனித்தனியே கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

பேட்டியின் போது, அச் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சங்கா், பொருளாளா் செல்வம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT