வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இயங்கும் அரசுப்பள்ளியில் படித்து வரும் 150 மாணவ–மாணவியருக்கு, துளி அறக்கட்டளை சார்பில், கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வாழப்பாடி பகுதியில் அரசுப்பள்ளிகளில் படித்து வரும் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, தன்னார்வ இயக்கமான ‘துளி’ அறக்கட்டளை உதவி வருகிறது.
வாழப்பாடி ஒன்றியத்தில் இயங்கும் முத்தம்பட்டி, சின்னக்குட்டி மடுவு, புங்கமடுவு, துக்கியாம்பாளையம், சோமம்பட்டி, சிங்கிபுரம், பெரியக்குட்டிமடுவு, பேளூர், வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம் கவர்கல்பட்டி, புழுதிக்குட்டை உள்ளிட்ட பல்வேறு அரசு தொடக்கப் பள்ளிகளில் படித்து வரும் 150 மாணவ–மாணவியருக்கு, துளி அறக்கட்டளை சார்பில், ரூ.40,000 செலவில், எழுது பொருட்கள், தேர்வு அட்டை, அளவுகோல், வாய்ப்பாடு எழுத்துப் பயிற்சி ஏடுகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, தலைமை ஆசிரியை சத்யக்குமாரி, துளி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜசேகரன், பெரியார்மன்னன் மற்றும் பேளூர் பிரவின், ஆசிரியர் முருகேசன், ஆட்டோ சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
'துளி இயக்கத்தில், 350 தன்னார்வலர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மாதந்தோறும் குறைந்தபட்சம் தலா ரூ.100 வீதம் கொடுக்கும் தொகை சேமித்து, அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வருகிறோம். இந்த சிறு உதவி மாணவ -மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு ஊக்கமாக அமையுமென' துளி அறக்கட்டளை இயக்குனர் மணிமேகலை ராஜசேகரன் தெரிவித்தார்.