மேட்டூர்: சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே கத்திமுனையில் தங்க நகை கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நங்கவள்ளி அருகே உள்ள குட்டப்பட்டி புதூர் நான்கு ரோட்டை சேர்ந்தவர் ருக்மணி (80). இவரது கணவர் முத்து கவுண்டர். இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். இவர்களுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். ருக்மணி தனியாக வசித்து வந்தார்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் ருக்மணி காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவுகளை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நான்கு நபர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். இருவர் முகமூடி அணிந்திருந்த ருக்மணியை எழுப்பி கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி காதில் அணிந்திருந்த 2 சவரன் எடை கொண்ட தோடு. பீரோவில் வைத்திருந்த 6 சவரன் இரட்டை வட சங்கிலி, 3 சவரன் சங்கிலி ஒன்றும் பீரோவை திறந்து எடுத்துச் சென்றனர்.
நால்வரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர். அவர்கள் தப்பி சென்றதும், மூதாட்டி அருகில் இருந்த மகன் வீட்டு கதவை தட்டி எழுப்பி உள்ளார். இதுகுறித்து நங்கவள்ளி காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
துப்பறியும் மோப்ப நாய் லில்லி, தடைய அறிவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். நங்கவள்ளி பொறுப்பு காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் வழக்குப் பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
இதையும் படிக்க: போலி உயில் மூலம் நடிகர் பிரபு, ராம்குமார் எங்களை ஏமாத்திட்டாங்க - சிவாஜியின் மகள்கள் பரபரப்பு புகார்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. முகமூடி கொள்ளையர்கள் மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்ததில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.