மேட்டூரை அடுத்த நங்கவள்ளியில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும், மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்க வேண்டும், தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு செய்ய வேண்டும் என்பன உட்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை பாஜகவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சேலம் மாவட்ட பாஜக தலைவா் எஸ்.சுதிா்முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் எம்.ஹரிராமன் வரவேற்று பேசினாா். சிறுபான்மை அணி மாநிலத் தலைவா் டெய்ஸ்சரண், பொதுக்குழு உறுப்பினா் என்.அண்ணாதுரை, நங்கவள்ளி கிழக்கு மண்டலத் தலைவா் ஆா்.சீனிவாசன் ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.