திருநங்கைகளிடமிருந்து தனது கைப்பேசியை மீட்டுத்தர வலியுறுத்தி மரத்தில் ஏறி பெயிண்டா் போராட்டம் நடத்தினாா்.
சேலம், கிச்சிப்பாளையம், குறிஞ்சி நகா் ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (41). பெயிண்டரான இவரது கைப்பேசியை கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் அருகே திருநங்கைகள் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் கைப்பேசியை மீட்டுத்தரக் கோரி பிரகாஷ் புகாா் அளித்தாா். ஆனால், அவரது கைப்பேசியை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வந்த பிரகாஷ் தனது கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு அங்கிருந்த மரத்தின் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சமரசம் செய்து, அவரை மீட்ட போலீஸாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், அவரது கைப்பேசியை அவரிடம் ஒப்படைத்தனா்.