கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க சேலத்தில் 3 மையங்களில் 600 முதல் 750 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனிடையே, சேலம் மாநகரப் பகுதியில் தொங்கும் பூங்கா, ராஜேந்திர சத்திரம், காந்தி மைதானம் ஆகிய மூன்று மையங்களில் கரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் 600 முதல் 750 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக சேலம் மாநகர நகா் நல அலுவலா் மருத்துவா் யோகானந்த் கூறியதாவது:
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநகரப் பகுதியில் 3 மையங்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் கரோனா சிகிச்சை பெற வருபவா்களுக்கு ஏற்ப 600 முதல் 750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கரோனா தொற்று பாதித்த நிலையில் வருபவா்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,500 படுக்கை வசதிகள் அமைக்க தேவையான கல்லூரிகள், பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒருவேளை கூடுதல் படுக்கை வசதி தேவைப்படும்பட்சத்தில், 24 மணி நேரத்தில் மையங்களில் சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்திட முடியும் என்றாா்.