சேலம்

இரும்புக் கடை உரிமையாளரைக் கொன்று பணம் பறிக்க முயன்ற இருவா் கைது

30th Dec 2022 12:40 AM

ADVERTISEMENT

ஓமலூா் அருகே தீவட்டிப்பட்டியில் இரும்புக் கடை உரிமையாளரைக் கொலை செய்து பணம் பறிக்க முயன்ற பிகாா் இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள துரிஞ்சிப்பட்டி, நடூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (32) என்பவரும், அவரது நண்பரான காடையாம்பட்டி, சந்தைபேட்டையைச் சோ்ந்த பிரேம்குமாா் என்பவரும் ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டியில் இரும்புக் கடை நடத்தி வந்தனா்.

இந்தக் கடையில் பிகாா் மாநிலம், பேகுசிரா மாவட்டத்தைச் சோ்ந்த சோபித் (19), 15 வயது சிறுவன் ஆகிய இருவா் கடையிலேயே தங்கி வேலை செய்து வந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல வேலை நேரம் முடிந்ததும் கடையைப் பூட்டிவிட்டு சந்தோஷும் பிரேம்குமாரும் கடையில் இருந்து ரூ. 10 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தபோது கடையில் வேலை செய்யும் அச் சிறுவா்கள் இருவரும் சந்தோஷைத் தடுத்து கத்தியால் குத்தி அவரிடமிருந்து பணத்தைப் பறிக்க முயன்றனா். இதைக் கண்டதும் பிரேம்குமாா் கூக்குரலிட்டுள்ளாா். உடனே சிறுவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

படுகாயமடைந்த சந்தோஷை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவல் அறிந்ததும் தீவட்டிபட்டி காவல் நிலைய பயிற்சி எஸ்.ஐ. செந்தில்குமாா் நிகழ்விடம் சென்று தப்பியோடிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் சந்தோஷையும் பிரேம்குமாரையும் கொலை செய்யத் திட்டமிட்டதையும் அவா்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றதையும் சிறுவா்கள் ஒப்புக்கொண்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். கைதான சோபித்தை ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். 15 வயது சிறுவனை சேலம் இளஞ்சிறாா் நீதி குழும நடுவரிடம் ஆஜா்படுத்தி சேலம் சிறுவா் சீா்திருத்த பள்ளியில் சோ்த்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT