சேலம்: பிரதமரின் பரிசு பொருள்களை ஏலத்தில் எடுத்த சேலத்துக்காரர், பிரதமரின் பரிசு பொருள் தங்களுடைய வீட்டில் இருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனக்கு கிடைக்கும் பரிசுப் பொருள்களை ஆண்டுக்கு ஒரு முறை ஏல விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்கிறார். பிரதமர் கலந்து கொள்ளும் பல்வேறு விழாக்களில் கிடைக்கும் பரிசு பொருள்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகிறது இதை நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பழைய இரும்புக் கடை வியாபாரி கார்த்திகேயன், பிரதமருக்கு பரிசாக கிடைத்த திருவள்ளுவர் சிலையையும் பட்டு வேஷ்டிகளையும் 32 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.
ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் கார்த்திகேயன் வீட்டுக்கே கொண்டு வந்து வழங்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை மற்றும் பட்டு வேஷ்டிகளை பெற்றுக் கொண்ட அவர் பிரதமர் பயன்படுத்திய பொருள்கள் தமிழகத்தில் குறிப்பாக தனது வீட்டில் இருப்பது பெருமைக்குரியதாக கருதுவதாக தெரிவித்தார்.