மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக நாளை மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9566 கன அடியாக சரிந்தது.
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வருவதால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று மாலை 119.05 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.32 அடியாக உயர்ந்தது.
அணையின் நீர் இருப்பு 92.39 டி.எம்.சியாக இருந்தது. அணையின் நீர் வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் நாளை நடப்பு நீர்பாசன ஆண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.