மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வருவதால் பாசனத் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 2,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9,536 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 118.91 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 91.74 டி.எம்.சியாக உள்ளது.