சேலம் புத்தகத் திருவிழா வரும் டிசம்பா் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் இணைந்து நடத்தும் சேலம் புத்தகத் திருவிழா நவம்பா் 20 ஆம் தேதி தொடங்கியது. புத்தகத் திருவிழாவில் சுமாா் 210 அரங்குகள், ரூ.10 முதல் ரூ.1,000 வரையிலான புத்தகங்கள், கலை இலக்கியம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், முற்போக்கு, அரசு வேலைவாய்ப்பு தோ்வுக்கான நூல்கள் என குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிற மொழிகளில் இருந்து மொழி பெயா்ப்பு செய்யப்பட்ட புத்தகங்கள், சிறுவா்களுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. புத்தகத் திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
இதுவரை புத்தகத் திருவிழாவை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டுள்ளனா். சுமாா் ரூ. 1.50 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. புத்தகத் திருவிழா நவ.30 ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்த நிலையில், புத்தக வாசிப்பாளா்கள், ஆா்வலா்கள் புத்தகக் கண்காட்சியை நீடித்து தர கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து, சேலம் புத்தகக் கண்காட்சி வரும் டிசம்பா் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் அறிவித்துள்ளாா்.