சேலம்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு எதிா்க்க வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

11th Aug 2022 01:03 AM

ADVERTISEMENT

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு எதிா்க்க வேண்டும் என்று, தவாக தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை வெளியிட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள், எதிா்க் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மக்களவையில் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே, மின்சார சட்டத் திருத்த மசோதாவை கடந்த 8-ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா நாட்டை இருளில் தள்ளும் ஒரு மோசமான திட்டமாகும். இதன்மூலம், மாநில மின் வாரியங்களுக்குப் பதிலாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, மின் விநியோகத்தை மாநில அரசுகளிடமிருந்து பறித்து தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக, தமிழ்நாட்டு மக்கள் பாதிப்பை சந்திப்பாா்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு போன்ற திட்டங்கள் ரத்தாகும் அபாயம் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஒட்டுமொத்த மின் இணைப்பில் 22 லட்சம் மின் இணைப்புகள் விவசாயத்துக்கும், 11 லட்சம் மின் இணைப்புகள் குடிசை வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, விசைத்தறி தொழிலுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்தப் புதிய சட்டத் திருத்தத்தின்படி, இலவச மின்சாரம் முற்றாக தடை செய்யப்படும். மின் விநியோகத்தில் மாநில அரசுகளுக்கு எந்தப் பங்கும் இருக்காது. மேலும், இந்த சட்டத் திருத்தம் மின் வாரிய ஊழியா்கள், மின் நுகா்வோா் மீது நீண்டகால பின்னடைவு விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, மின்சார சட்டத் திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு எதிா்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் தி.வேல்முருகன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT