சேலம்

பாலமலையில் ரூ. 8.35 கோடியில் திட்டப் பணிகள்: சேலம் ஆட்சியா் ஆய்வு

DIN

பாலமலை ஊராட்சியில் ரூ. 8.35 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பாலமலை ஊராட்சி உள்ளது. இங்கு 33 குக்கிராமங்கள் உள்ளன. 2,895 போ் வசித்து வருகின்றனா். மலைக் கிராம மக்களின் குழந்தைகள் கல்வி கற்க 6 அரசு தொடக்கப் பள்ளிகளும், ஒரு உண்டு உறைவிடப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசால் மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் பாலமலை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் பிரதமா் குடியிருப்பு திட்டத்தின்கீழ் ரூ. 2.84 கோடியில் நடைபெற்று வரும் குடியிருப்பு கட்டுமானப் பணிகள், ரூ. 18 லட்சத்தில் பசுமை வீடுகள் கட்டும் பணி, ரூ. 5.06 கோடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளையும் ஆட்சியா் செ.காா்மேகம் ஆய்வு செய்தாா்.

அதேபோன்று 15ஆவது நிதிக்குழு மானியம், உபரி நிதி, பொதுநிதி திட்டத்தின்கீழ் சாலை வசதி, குடிநீா் வசதி, தெருவிளக்கு அமைத்தல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுதல் என ரூ. 26.45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள் உட்பட ரூ. 8.35 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது பணிகளை தரமாகவும் உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் முழுமையாகக் கிடைப்பதை அலுவலா்கள் தொடா்ந்து உறுதி செய்ய உத்தரவிட்டாா்.

முன்னதாக லக்கம்பட்டி ஊராட்சி நீதிபுரம் கிராமத்தில் 60 பேருக்கு தமிழ்நாடு பழங்குடியினா் நல வாரியத்தால் வழங்கப்படும் பழங்குடியினா் அடையாள அட்டை எண்ணை ஆட்சியா் வழங்கினாா்.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் பாலமலைக்கு தாா்சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று மனு அளித்தாா்.

இந்த ஆய்வின்போது மேட்டூா் சாா் ஆட்சியா் வீா் பிரதாப் சிங், மேட்டூா் வனச்சரகா் சி.அறிவழகன், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சரவணகுமாா், துணைத் தலைவா் எம்.சி.மாரப்பன், வட்டாட்சியா் முத்துராஜா, கொளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோக் ராஜன், முருகன், பாலமலை ஊராட்சி மன்றத் தலைவா் தேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT