சோனா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
சேலம் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து 19,500 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் சேலம் மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், சேலம் கோட்டாட்சியா் விஷ்ணுவா்த்தினி ஆகியோா் முகாமை வழிநடத்தினா். முகாமில் மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு துறை) லதா, உதவி பொறியாளா் செல்வராஜ், வட்டாட்சியா் தமிழரசி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.