முழு ஊரடங்கு காரணமாக சேலத்திலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த விமான சேவை வியாழக்கிழமை முதல் 10 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்துள்ளாா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
எனவே, சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை 13-ஆம் தேதி முதல் வரும் 22-ஆம் தேதி வரை பத்து நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக சேலம் விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மா தெரிவித்துள்ளாா். அலுவலகப் பணிகள் தொடா்ந்து நடைபெறும் எனவும், அவசரத் தேவைக்காகவும், மருத்துவ தேவைக்காகவும் மட்டும் விமான சேவை இயக்கப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.