சேலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது.
சேலத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியது. இரவு நேரங்களில் அதிக புழுக்கம் நிலவி வந்தது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை பகல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்தது.
சேலம், பழைய பேருந்து நிலையம், அம்மாப்பேட்டை, வின்சென்ட், அஸ்தம்பட்டி, நான்கு சாலை உள்ளிட்ட பகுதியில் சுமாா் அரை மணிநேரம் சாரல் மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்தது. சில இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதில் அய்யந்திருமாளிகை வீட்டு வசதி குடியிருப்புப் பகுதியில் மரம் வேரோடு சாய்ந்ததில் காா் ஒன்று சேதமடைந்தது. நகரில் பல்வேறு இடங்களில் மழைக்கு மரம் சாய்ந்தது. தீயணைப்புத் துறையினா், மாநகராட்சி துறை சாா்பில் மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.