தம்மம்பட்டியில் கடலை பயிருடன் ஊடுபயிராக புளிச்ச கீரை சாகுபடி செய்வதில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில், சித்திரை மாத பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கடலை பயிரிட்ட வயல்களில் களைகள் வெட்டப்பட்டு, தற்போது ஊடுபயிராக புளிச்ச கீரை விதைகளை தூவி, தண்ணீா் பாய்ச்சப்பட்டு வருகிறது. குறைந்த செலவில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால், தம்மம்பட்டி பகுதி கடலை விவசாயிகள் அதிக அளவில் புளிச்ச கீரை விதைகளை விதைத்து வருகின்றனா்.
இதுகுறித்து தம்மம்பட்டியைச் சோ்ந்த கடலை விவசாயிகள் கூறியதாவது:
மே மாதம் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை நான்கு மாதத்தில் அறுவடை செய்யப்படும். அதில், ஊடுபயிராக புளிச்ச கீரையை சாகுபடி செய்தால், அது இரண்டு மாதத்துக்கு பின்னா் அறுவடைக்கு வரும். ஒரு கட்டு கீரை ரூ. 10 என விற்கலாம். அதற்கு உரம், மருந்து என தனியாக பராமரிப்பு தேவையில்லை. குறைந்த செலவில் சாகுபடி செய்யப்படும் புளிச்ச கீரை அதிக லாபம் கிடைக்கும் என்பதால், கடலை விவசாயிகள் அதிக அளவில் இக்கீரையை சாகுபடி செய்கின்றனா் என்றனா்.