உரிய ஆவணங்கள் இன்றி சேலம் வழியாக காரில் கொண்டு வரப்பட்ட ரூபாய் 7.57 லட்சத்தை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் வாகன தணிக்கை மேற்கொண்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சேலம் ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் பகுதியில் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவிலிருந்து அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரில் ரூபாய் ஏழு லட்சத்து 57 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தைக் கொண்டு வந்த பெங்களூருவைச் சேர்ந்த பாலசுரேஷிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் கார் வாங்குவதற்காக பணத்தை எடுத்துக்கொண்டு திருச்செங்கோடு செல்வதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் பணம் பிடிபட்ட இடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பால சுரேஷ் கொண்டுவந்த ஏழு லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களது முன்னிலையில் பணம் சரிபார்க்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணத்துக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உரிமையாளர் பெற்றுக்கொள்ளலாம் என அலுவலர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.