மேச்சேரி ஒன்றியம், சிந்தாமணி கிராமத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் 480 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பயனாளிகளுக்குப் பொருள்களை வழங்கிப் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா நிவாரணமாக 10.80 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும். மேட்டூா் தொகுதியில் 1.05 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு இத்தொகுப்பு வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை 480 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாளைமுதல் திமுகவினா் மக்களின் வீடுதேடி வந்து பொருள்களை வழங்குவா். தமிழகத்திற்கு தேவையான கரோனா தடுப்பூசிகளை வழங்க முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். இந்தியாவில் கரோனா இல்லாத முன்மாதிரியான மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, அவைத் தலைவா் பா.கோபால், துணைச் செயலாளா் சம்பத்குமாா், சேலம் மத்திய மாவட்ட பொறுப்பாளா் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எஸ்.ஆா்.பாா்த்திபன், டாக்டா் செந்தில்குமாா், மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளா் சீனிவாசப்பெருமாள், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.