சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவராத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக புனரமைப்பு பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கும்பாபிஷேக பணிகள் எப்பொழுது தொடங்கப்பட்டது, நன்கொடையாளர்கள் விபரம், கொடிமரம் அனுமதி உள்ளிட்டவைகள் குறித்து கோயில் செயல் அலுவலர் கஸ்தூரியிடம் விரிவாக கேட்டறிந்தார். பின்னர் அவர் அருள்மிகு சோமேஸ்வரர், சௌந்தரநாயகி அம்மன் சுவாமிகள் உள்ள மண்டபங்களை பார்வையிட்டு பளிங்கு கற்கள், இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கோயில் வளாகத்தை சுற்றி வந்த அவர் தரைப்பகுதியில் களர் செடிகள் அதிகளவில் இருந்ததை பார்வையிட்டு அதனை அகற்றுவதற்கு முன்னும், அகற்றிய பின்னரும் புகைப்படம் எடுத்து அனுப்ப உத்தரவிட்டார். வளாகத்தில் நீதிமன்ற வழக்குகளில் உள்ளஇடங்களை பார்வையிட்டு அதனை சட்டப்படி நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்க அறிவுறுத்தினார். கோயிலில் ஆய்வு மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் பக்தர்கள் சோமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சுமார் 15 ஏக்கருக்கு மேல் உள்ளதாகவும் அவைகள் கோயில் கணக்குகளில் கொண்டு வர வேண்டும் எனவும் கோயிலுக்கு வெளியே கோயிலுக்கு பாத்தியப்பட்ட நந்தவனம் தனியார் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது குறித்தும் தெரிவித்தனர் இவைகளை உடனடியாக நடவடிக்கை எடுத்து கோயில் கணக்குகளில் கொண்டுவர அறநிலையத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:- 1994ம் ஆண்டு சோமேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. அதனையடுத்து ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பணி நடைபெறவேண்டும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் பழமை வாய்ந்தது என்பதால் அதன் தொன்மை மாறாமல் பணி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேக திருப்பணி மேற்கொள்வதர்கு உதவிகள் தேவைப்பட்டால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆறு மாதங்களுக்குள் இப்பணிகள் முடிவுற்று விரைவில் கும்பாபிஷேக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அவை மாவட்ட ஆட்சியர் மூலம் நிலங்கள் திரும்ப கோயிலுக்கு மாற்ற சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும். கோயிலின் குளமும் செப்பனிடும், ஆக்கிரமிப்பில் உள்ள நந்தவனத்தை மீட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலையில் உள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயிலில் நண்பகல் 12 மணிக்கு அன்னதானதிட்டம் நடைபெற்று வருகின்றது. நகர் பகுதியில் உள்ள அதிமான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலுக்கு அன்னதானதிட்டம் மாற்றப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தேவை இருப்பதால் தான் அன்னதானதிட்டம் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தேவைப்படின் முதல்வரின் அனுமதி பெற்று இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறும் நாளிலிருந்து புதிதாக அன்னதானதிட்டம் தொடங்க பரிசிலிக்கப்படும் என்றார்.
மேலும் அவரிடம் செய்தியாளர்கள் சங்ககிரி மலைக்கோட்டையின் நுழைவு வாயில் அறிவிப்பு பலகை ஏதுவும் வைக்காமல் திடீரென பூட்டப்பட்டுள்ளதால் ஆடிமாதம் கோட்டை மாரியம்மனை வழிபட பெண்கள் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என கேட்டதற்கு அரசின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு வந்துள்ளீர்கள், இரண்டு நாள்களுக்குள் மாவட்ட ஆட்சியர், தொல்லியத்துறை அதிகாரிகளிடம் பேசி பக்தர்கள் சுவாமியை வழிபட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், இந்து சமய அறிநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபன், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகன், சேலம் இந்து சமய அறிநிலையத்துறை இணை ஆணையர் மங்கரையர்கரசி, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன், வட்டாட்சியர் எஸ்.விஜி, பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.பாலசுப்ரமணி, திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி, மாவட்ட துணைச் செயலர்கள் சம்பத்குமார், க.சுந்தரம், சங்ககிரி ஒன்றியச் செயலர் (பொறுப்பு) கே.எம்.ராஜேஷ், நகரச் செயலர் எல்ஐசி.சுப்ரமணியம், முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா, முன்னாள் நகரச் செயலர் கே.எம்.முருகன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கேஜிஆர்.ராஜவேலு, செல்வராஜ் உள்ளிட்ட பலர் ஆய்வின் போது உடனிருந்தனர்.
மலைக்கோட்டையினை உடனடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சரின் அறிவுரையை அடுத்து மலைக்கோட்டை நுழைவு வாயிலில் சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம் பார்வையிட்டார். அப்போது பிரதான நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது பின்னர் தொல்லியத்துறை அதிகாரிகள் நுழைவாயிலை திறந்து விட்டப்பின்னர் மலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் வரை வாகனங்களில் சென்று சுவாமியை தரிசனம் செய்யும் மாதிரி வரைப்படத்தை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் விளக்கினார். அவற்றையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பின்னர் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளில் அவருக்கு மலையடிவாரத்தில் மரியாதை செலுத்தும் இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.